Sunday 2 February 2014

பிறப்பு

நான் 1991 ஆம் வருடம் மார்ச் 4(மாசி 20)ஆம் தேதி நள்ளிரவு 12:05க்கு பிறந்தேன்.
எனக்கு முன் 3 சகோதரிகள். என் அப்பாவிற்கு 35 வயதில் தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சிறிது காலம் என் தாய் தந்தையருக்கு குழந்தை இல்லை. அதன் பிறகு மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது. ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று தவமாய் தவம இருந்து என்னை பெற்றெடுத்தார்கள். நான் பிறக்கும் பொழுது என் தந்தைக்கு வயது 50. நான் வயிற்றுக்குள் இருக்கும் போதே என் தந்தைக்கு உடல் நலம் சரி இல்லாமல் போய்விட்டது. நெஞ்சு வலி வந்து பெரும்பாடுபட்டுவிட்டார். நான் என் தாயின் வயிற்றில் இருக்கும் எட்டாவது மாதத்திலேயே எனக்கு ஏழரை சனி பிடித்துவிட்டதாம். அதனால் என் தந்தை என்னுடன் நிறைய நாள் வாழமாட்டார் என்று ஜோதிடம் சொன்னது.
நான் கடைக்குட்டி ஆதலால் எனக்கு செல்லம் அதிகம். நான் எது கேட்டாலும் எனக்கு வாங்கி கொடுத்துவிடுவார்கள். எனக்கும் பிடிவாதம் அதிகம். ஆகவே நான் கேட்டது கிடைக்கவில்லை என்றால் வீட்டை ரணகளப் படுத்திவிடுவேன். இதை என் சகோதரிகளும் பயன்படுத்திகொள்வர். அவர்கள் ஒரு டீ அல்லது காபி வேண்டுமென்று கேட்டால் என் தாய் போட்டு தரமாட்டார். ஏனென்றால் காலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே என் தாய் டீ அல்லது காபி போட்டுக்கொடுப்பார். இடைப்பட்ட நேரங்களில் வேண்டும் என்றால் என்கிட்டே சொல்லி விடுவார்கள். நான் கேட்டால் என் தாய் மறுக்காமல் போட்டுக்கொடுப்பார்.
நான் பிறந்ததில் இருந்தே என் தந்தை உடல் நலம் குன்றி பெரும் கஷ்டப்பட்டார். நான் ஒரு ஆங்கிலப் பள்ளியில் தான் 5ஆம் வகுப்பு வரை படித்தேன். பிறகு வேறு ஒரு ஆங்கிலப் பள்ளியில் 6ஆம் வகுப்பிற்கு சேர்த்துவிட்டனர். அங்கு நான் படிக்க பிடிக்காமல் என் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேர்ந்து கொண்டேன் அடம் பிடித்து.